இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் இன்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக ஜூன் 2-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவுள்ளார் மெக்கல்லம்.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 0-4 என்ற கணக்கில் படுதோல்வியடைந்ததையடுத்து, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கிறிஸ் சில்வர்வுட் நீக்கப்பட்டார். ஜோ ரூட்டும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க | பொலார்ட் நீக்கம்: சென்னைக்கு எதிராக மும்பை பந்துவீச்சு
இந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், இங்கிலாந்தின் டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 அணிகளுக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் செயல்படவுள்ளனர்.
பிரெண்டன் மெக்கல்லம் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். கரீபியன் பிரீமியர் லீக்கில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இங்கிலாந்து பயிற்சியாளராகப் பொறுப்பேற்பதால், நடப்பு ஐபிஎல் சீசனுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மெக்கல்லம் விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.