செய்திகள்

இதுதான் கடைசி விம்பிள்டனா?: செரீனா வில்லியம்ஸ் பதில்

DIN

விம்பிள்டனில் முதல் சுற்றில் தோற்ற செரீனா வில்லியம்ஸ், அடுத்த வருடப் போட்டியில் பங்கேற்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்துள்ளார். 

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். 2021 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். பிறகு முதல் சுற்று ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் விம்பிள்டன் போட்டியிலிருந்து விலகினார். 

கடந்த வருட விம்பிள்டன் போட்டியில் கலந்துகொண்ட பிறகு வேறு எந்த டென்னிஸ் போட்டியிலும் 40 வயது செரீனா பங்கேற்கவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் நகரில் நடைபெற்ற ராத்ஸே சர்வதேச டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் விளையாடினார். குழந்தை பிறந்த பிறகு வழக்கம் போல விளையாட ஆரம்பித்த செரீனா, தற்போது ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விளையாட வந்துள்ளார்.

ஒரு வருடமாக விளையாடாமல் போனதால் தரவரிசையில் 1204 இடத்துக்கு இறங்கியுள்ளார் செரீனா. விம்பிள்டன் 2022 போட்டியில் முதல் சுற்றில் தரவரிசையில் 113-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் ஹார்மனி டேன்-ஐ எதிர்கொண்டார். 

24 வயது ஹார்மனி டேன், மூன்று மணி நேரம் போராடி 7-5, 1-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் செரீனாவைத் தோற்கடித்தார். 

இதுதான் செரீனாவின் கடைசி விம்பிள்டனா?

இக்கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:

இந்தக் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. யாருக்குத் தெரியும், நான் எப்போது மீண்டும் வருவேன் என? இப்போது நான் என்ன நினைக்கிறேனோ, அதற்கு மட்டும்தான் நான் திட்டமிடுகிறேன். 

அடுத்ததாக யு.எஸ். ஓபன் போட்டியில் பங்கேற்க ஆவலாக உள்ளேன். அங்குதான் முதல்முதலில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றேன். இன்னும் நன்றாகப் பயிற்சியெடுத்து அப்போட்டியில் விளையாட வேண்டும் என்கிற ஊக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்வி என்னை இன்னும் அதிகமாகப் பயிற்சியெடுக்கத் தூண்டுகிறது. மோசமாக நான் விளையாடவில்லை, நூலிழையில் தான் வெற்றியைப் பறிகொடுத்துள்ளேன் என்றார். 

ஏழு முறை விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ள செரீனா, கடைசியாக 2016-ல் விம்பிள்டனில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார். குழந்தை பிறந்த பிறகு 2018, 2019 விம்பிள்டன் போட்டிகளின் இறுதிச்சுற்று ஆட்டங்களுக்குத் தகுதியடைந்தார்.

சமீபத்திய தோல்விகளால் செரீனாவின் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான காத்திருப்பு மீண்டும் தொடர்கிறது. 

இதுவரை 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார். ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார். கடைசியாக, 2017-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். அதன்பிறகு விளையாடிய நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளிலும் தோல்வியடைந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT