கஜகஸ்தானில் நடைபெறும் காசனோவ் நினைவு தடகள மீட்டில் இந்தியரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான எஸ்.தனலட்சுமி, மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
பந்தய இலக்கை 22.89 விநாடிகளில் எட்டிய அவர், தனது புதிய தனிப்பட்ட பெஸ்ட்டைப் பதிவு செய்தார். இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான டூட்டி சந்த், 23.60 விநாடிகளில் வந்து 3-ஆம் இடம் பிடித்தார். ஹிமா தாஸ் ஹீட்ஸில் காயம் கண்டதால் பந்தயத்தில் பங்கேற்கவில்லை.
3-ஆவது இந்திய வீராங்கனை: 200 மீட்டர் ஓட்டத்தில் 23 விநாடிகளுக்குள்ளாக பந்தைய இலக்கை எட்டியிருக்கும் 3-ஆவது இந்திய வீராங்கனை தனலட்சுமி ஆவார். சரஸ்வதி சாஹா (22.82 விநாடிகள்), ஹிமா தாஸ் (22.88 விநாடிகள்) ஆகியோர் முதலிரு இடங்களில் உள்ளனர். தனலட்சுமி தங்கம் வென்றாலும், ஜூலையில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு உரிய தகுதி இலக்கை (22.80) எட்டவில்லை.
இதனால் நேரடியாக அப்போட்டிக்குத் தகுதிபெறத் தவறிய தனலட்சுமி, உலக ரேங்கிங் அடிப்படையில் அதற்கான வாய்ப்பை எதிர்
நோக்கியிருக்கிறார்.