ஆறு முறை ரஞ்சி கோப்பைப் போட்டியை வென்று இந்தியாவின் நெ.1 பயிற்சியாளராக அனைவராலும் பாராட்டப்படுகிறார் சந்திரகாந்த் பண்டிட்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்று, போட்டியின் 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது.
41 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை மத்தியப் பிரதேச அணி வெல்ல முக்கியக் காரணம் - பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் (60).
இந்திய அணிக்காக 5 டெஸ்டுகளும் 36 ஒருநாள் ஆட்டங்களும் விளையாடியவர் பண்டிட். ரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பை, மத்தியப் பிரதேச அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
கரோனாவுக்கு முன்பு ரஞ்சி கோப்பைப் போட்டியில் பண்டிட் பயிற்சியளித்த நான்கு வருடங்களிலும் அவருடைய அணிகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றன. அதில் மூன்று முறை கோப்பையைத் தட்டிச் சென்றன.
2017-18, 2018-19 ஆண்டுகளில் விதர்பா அணி அடுத்தடுத்து ரஞ்சி கோப்பைகளை வென்றது. அந்த இரு வருடங்களிலும் 22 ஆட்டங்களில் விதர்பா அணி ஓர் ஆட்டத்திலும் தோற்கவில்லை. அப்போதே பண்டிட் வெகுவாகப் பாராட்டப்பட்டார். இப்போது மத்தியப் பிரதேச அணி சாம்பியனாகி பண்டிட்டுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
பண்டிட் பயிற்சியளித்து ஆறு முறை அணிகள் ரஞ்சி கோப்பையை வென்றுள்ளன. மும்பை மூன்று முறையும் விதர்பா இருமுறையும் ம.பி. ஒருமுறையும் ரஞ்சி கோப்பையை வென்றுள்ளன. இதனால் தான் ரஞ்சி கோப்பையை வென்றதற்காக மத்தியப் பிரதேச அணியைப் பாராட்டும் சச்சின், ரவி சாஸ்திரி, அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற பிரபலங்கள் அனைவரும் மறக்காமல் பண்டிட்டுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள். இதனால் இந்தியாவின் நெ.1 பயிற்சியாளர் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார் பண்டிட்.
சந்திரகாந்த் பண்டிட் பயிற்சியில் ரஞ்சி கோப்பையை வென்ற அணிகள்
2002-03: மும்பை
2003-04: மும்பை
2015-16: மும்பை
2017-18: விதர்பா
2018-19: விதர்பா
2021-22: மத்தியப் பிரதேசம்