இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இல்லாததால் இந்திய அணி தோற்கப்போகிறது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஸ் கனேரியா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணி இங்கிலாந்துக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதில் இங்கிலாந்து அணி 4ஆம் நாள் ஆட்ட முடிவில் 259 ரன்களை எடுத்தது. வெற்றி பெற இன்னும் 119 ரன்களே தேவை.
இந்திய டெஸ்ட் அணியில் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் இடம்பெறவில்லை. அவர் ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் ஜடேஜா இருக்கிறார்.
அஸ்வின் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஸ் கனேரியா கூறியதாவது:
எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்து தோல்வி பெறும் நிலைக்கு வந்துள்ளது. அஸ்வினை ஏன் 11பேர் கொண்ட அணியில் சேர்க்கவில்லை? யார் இந்த முடிவினை எடுத்தது? பயிற்சியாளர் திராவிட்க்கு இங்கிலாந்து பிட்ச் பற்றி தெரியாதா? இங்கிலாந்து வெயிலுக்கு 3வது நாளுக்குப் பிறகு ஸ்பின்னர்களுக்கு பந்து நன்றாக திரும்புமே. பும்ரா மட்டுமே அற்புதத்தை நிகழத்துவார் போலிருக்கிறது. இந்தியா அஸ்வினை தேர்வு செய்யாமல் தவறிழைத்து விட்டது. அதற்கான பலனையும் அனுபவிக்கப்போகிறது.