இங்கிலாந்துடனான ஆஷஸ் கடைசி டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் கடைசி டெஸ்ட் ஆட்டம் பகலிரவு ஆட்டமாக ஹோபார்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 303 ரன்களும், இங்கிலாந்து 188 ரன்களும் எடுத்தன.
இதையடுத்து, 115 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா மார்க் வுட் வேகத்தில் வீழ்ந்து 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க | இந்தியா ஓபன்: இறுதிச்சுற்றில் லக்ஷயா சென்; வெளியேற்றப்பட்டாா் சிந்து
இதன்மூலம், இங்கிலாந்து வெற்றிக்கு 270 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. இந்த முறை இங்கிலாந்துக்கு தொடக்கம் நன்றாகவே அமைந்தது. ரோரி பர்ன்ஸ் மற்றும் ஸாக் கிராலே முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். 26 ரன்கள் எடுத்த பர்ன்ஸ், கேமரூன் க்ரீன் பந்தில் போல்டானார். இதன்பிறகு, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து களமிறங்கி வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர்.
கிராலே 36 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் 11 ரன்களைத் தாண்டவில்லை. இதனால், இங்கிலாந்து அணி 38.5 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட், கேமரூன் க்ரீன் தலா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன்மூலம், 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.