கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் குரூப் சி பிரிவில் ஆர்ஜெண்டினா, போலந்து அணிகள் மோதின.
வெற்றி பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் முக்கியமான போட்டியாக இருந்தது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆர்ஜெண்டினாவை சேர்ந்த அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் 46ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். பின்னர் ஆர்ஜெண்டினாவை சேர்ந்த ஜூலியன் அல்வாரெஸ் 67வது நிமிஷத்தில் இரண்டாவது கோலை அடித்தார்.
இறுதி வரை போராடிய போலந்து அணியால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என ஆர்ஜெண்டினா வெற்றி பெற்றது.
குரூப் சி பிரிவில் இன்னொரு ஆட்டத்தில் சவுதி அரேபியா, மெக்சிகோ அணிகள் மோதின. இந்த அணிகளும் முதல் பாதியில் கோல் அடிக்கவில்லை.
இரண்டாம் பாதியில் மெக்சிகோ தனது முதல் கோலை 47வது நிமிஷத்தில் அடித்தது. 52வது நிமிஷத்தில் 2வது கோலையும் அடித்து அசத்தியது. சவுதி அரேபியா எக்ஸ்ட்ராவாக கொடுக்கப்பட்ட (90+5) 5வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்தது. இறுதியில் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
போலந்து அணியின் புள்ளியும் மெக்சிகோ அணியின் புள்ளியும் சமமாக இருந்தாலும் இந்த போட்டியில் மெக்சிகோ 7 மஞ்சள் அட்டைகளையும், போலந்து 4 மஞ்சள் அட்டைகளையும் பெற்றதன் காரணமாக போலந்து அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பெற்றது.
இதன் மூலம் குரூப் சி பிரிவில் ஆர்ஜெண்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 1986க்கு பிறகு இப்போதுதான் லீக் சுற்றில் இருந்து போலந்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவது குறிப்பிடத்தக்கது.
நாக் அவுட் சுற்றில் போலந்து, பிரான்ஸ் அணியுடனும் ஆர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா அணியுடனும் மோத உள்ளது.