பிஃபா 17 வயது மகளிா் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி இந்தியாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த வாய்ப்பு பறிபோயிருக்கிறது.
சா்வதேசக் கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) சாா்பில் வரும் அக்டோபா் மாதம் இந்தியாவில் புவனேசுவரம், நவி மும்பை, கோவா ஆகிய நகரங்களில் யு-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவிருந்தது. கடந்த 2020-ல் நடைபெறவிருந்த இப்போட்டி கரோனா தொற்று பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்குத் (AIFF) தடை விதித்துள்ளது ஃபிஃபா அமைப்பு. இதன் காரணமாக யு-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது.
தேசிய விளையாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு, அகில இந்தியக் கால்பந்து சம்மேளனத்தை மே மாதம் முதல் நிர்வகித்து வருகிறது. ஆனால் நிர்வாகத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு இருப்பதால் அது ஃபிஃபா விதிகளுக்கு முரணாக உள்ளதாகக் கூறி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது ஃபிஃபா அமைப்பு. இந்தத் தடை விலகும் வரை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பாக இந்திய அணியால் சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.