ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்னைக் கன்னத்தில் அறைந்தார் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் உண்மையைப் போட்டுடைத்துள்ளார்.
இதனை ராஸ் டெய்லர் “ பிளாக் அண்ட் வொயிட் ” என்ற அவரது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
தனது சுயசரிதையில் அவர் கூறியிருப்பதாவது: “ கடந்த 2011 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 195 ரன்களை துரத்தியது. அந்தப் போட்டியில் நான் ரன் எடுக்காமல் 0 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினேன். அதன்பின் அணியில் உள்ள அனைவரும் ஹோட்டலின் மேல் தளத்தில் உள்ள மதுக்கூடத்தில் இருந்தனர். லிஸ் ஹர்லி ஷேன் வார்னேவுடன் இருந்தார்.
இதையும் படிக்க: சென்னையில் தனியார் வங்கியில் கொள்ளை: 4 தனிப்படைகள் அமைப்பு
அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ராஸ் நீங்கள் ரன் எடுக்காமல் வெளியேறுவதற்காக நாங்கள் உங்களை கோடிக் கணக்கில் ஏலம் எடுக்கவில்லை என்றனர். மேலும், எனது கன்னத்தில் மூன்று நான்கு முறை அறைந்தார். அவர் என்னை அறைந்து விட்டு சிரித்தார். அந்த அறை வலியைக் கொடுப்பதாக இல்லை. ஆனால், அந்த அறைகள் விளையாட்டுக்காக எனவும் உறுதியாக சொல்ல முடியாது. அந்த சூழ்நிலையில் அந்த சம்பவத்தை ஒரு பெரிய பேசுபொருளாக மாற்ற விரும்பவில்லை. ஆனால், இது போன்ற சம்பவங்கள் எல்லா போட்டிகளிலும் நடைபெறுகிறது என்பதை கற்பனை செய்து பார்க்கவே கடினமாக இருக்கிறது.” என அந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார்.
இனவெறி தொடர்பான தாக்குதல்களுக்கும் ஆளானதாக ராஸ் டெய்லர் தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.