சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இந்திய ஏ மகளிர் அணி தனது கடைசி சுற்றில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியது. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்ததால் தங்கம் வெல்லும் என இந்திய ஏ அணி மீது எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் கடைசி சுற்றில் இந்திய ஏ அணி 1-3 என வீழ்ந்தது. இந்திய வீராங்கனைகள் தானியா சச்தேவ், பக்தி குல்கர்ணி ஆகியோர் தோல்வியடைந்தனர். ஹம்பி, வைஷாலி தங்களுடைய ஆட்டங்களை டிரா செய்தார்கள்.
நேற்று வரை முதலிடத்தில் உள்ள இந்திய ஏ மகளிர் அணி இன்றைய தோல்வியால் 3-ம் இடத்துக்கு இறங்கி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
உக்ரைன் மகளிர் அணி போலந்தை 3-1 என வீழ்த்தியது. இதனால் அந்த அணிக்குத் தங்கப் பதக்கம் உறுதியானது. ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் இந்திய அணி வெண்கலத்தையும் வென்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல்முறையாகப் பதக்கம் வென்றுள்ளது.
மகளிர் பிரிவில் தமிழகத்தின் நந்திதா இடம்பெற்றுள்ள இந்திய சி அணி கஜகஸ்தானிடம் 1.5-2.5 என வீழ்ந்தது. இன்றைய ஆட்டத்தில் நந்திதா தோல்வியடைந்தார். இந்திய மகளிர் பி அணி, ஸ்லோவாகியாவுடனான மோதலில் 2-2 என சமன் செய்தது.
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்திய பி அணியும் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளன.