சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு ரசிகர்கள் பலத்த பாராட்டு தெரிவித்தார்கள்.
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, ஆகஸ்ட் 9 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நிறைவு விழா நடைபெறுவதையொட்டி, தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ட்விட்டரில் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரின் நிறைவு நாள் நிகழ்ச்சிகளுக்காகத் தயாராகி வரும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு அவர்களுடன் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கிய போது.. என்று கூறி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.