இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஒரு திறமைசாலி எனவும், அவரது திறமை எங்களுக்குப் புரிகிறது எனவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையேயான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அதே போல டி20 தொடரையும் கைப்பற்றியது.
இதையும் படிக்க: காமன்வெல்த்: மும்முறை தாண்டுதல் போட்டியில் 2 பதக்கங்கள்
ரிஷப் பண்ட், ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரது சிறப்பான பேட்டிங் மற்றும் இந்திய பந்து வீச்சாளர்களின் அசத்தலான பந்து வீச்சும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தது.
போட்டி முடிவடந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியதாவது: “ இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். சீரான இடைவெளிகளில் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றியது வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தது. ஆவேஷ் கானின் திறமையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓரிரு போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக ஒருவர் சரியாக விளையாடவில்லை எனக் கூறிவிட முடியாது. அவர்களது திறமைகளை மனதில் வைத்திருக்க வேண்டும். வீரர்களுக்கு அவர்களது திறமையை வெளிப்படுத்த உரிய காலம் கொடுக்கப்பட வேண்டும். ஆவேஷ் அவரது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்.” என்றார்.