டி20 கிரிக்கெட்டின் மகத்தான வீரரான டுவைன் பிராவோ தன்னுடைய திறமையை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார்.
சிபிஎல் 2021 பட்டத்தை டுவைன் பிராவோ தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி வென்றுள்ளது. கடந்த வருடம் டிரின்பேகோ அணியில் பிராவோ விளையாடியபோதும் அந்த அணி கோப்பையை வென்றது. இதன்பிறகு கடந்த வருடம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம் பிடித்த செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு மாறி, தலைமை தாங்கி தற்போது சிபிஎல் கோப்பையை வென்றுள்ளார் பிராவோ.
புதிய அணியில் விளையாடி கோப்பையை வெல்ல முடியுமா எனத் தனக்குத் தானே சவால் விடுத்து செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியில் இணைந்தார். திறமையை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்கலாம் என்பதை நிரூபிக்கும் விதமாக கோப்பையை மீண்டும் வென்றுள்ளார் பிராவோ. என்னவொரு துணிச்சல், என்னவொரு திறமை?
டி20 கிரிக்கெட்டில் அதிக முறை (15) இறுதிச்சுற்று ஆட்டங்களில் வென்ற வீரர் என்கிற பெருமை கிரோன் பொலார்டுக்கு இருந்தது. அந்தச் சாதனையை பிராவோ தற்போது சமன் செய்துள்ளார்.
மேலும் டி20 கிரிக்கெட்டில் 500 ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த இலக்கை எட்டிய 2-வது வீரர். சிபிஎல் போட்டியில் ஐந்து முறை இறுதிச்சுற்று வெற்றிகளில் பங்களித்துள்ளார். வேறு எந்த வீரருக்கும் இந்தப் பெருமை கிடையாது. சிபிஎல் போட்டியில் ஒரு கேப்டனாக நான்கு முறை கோப்பையை வென்றுள்ளார். வேறு எந்த கேப்டனும் இரு முறைக்கு மேல் சிபிஎல் கோப்பையை வென்றதில்லை.
சிஎஸ்கே ரசிகர்களின் கொடுப்பினை, டி20 கிரிக்கெட்டில் அதிகமாகச் சாதித்துள்ள பிராவோ, சிஎஸ்கே அணியில் விளையாடுவதுதான். ஒரு ஆல்ரவுண்டராக சிஎஸ்கே அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார். கடைசி ஓவர்களில் பிராவாவின் பந்துவீச்சை நம்பியே சிஎஸ்கே உள்ளது.
சிஎஸ்கே வீரராக ஐபிஎல் 2021 போட்டியையும் வென்று டி20 கிரிக்கெட்டில் அதிக முறை (16) இறுதிச்சுற்று ஆட்டங்களில் வென்ற வீரர் என்கிற சாதனையை பிராவோ நிகழ்த்துவாரா?