செய்திகள்

டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்குத் தகுதி!

DIN

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டை எளிதாக வென்றது இந்திய அணி. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டை இரு நாள்களில் வென்றது இந்தியா. டெஸ்ட் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் மார்ட் 4 அன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றார். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றார்கள். 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

2-ம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 60, அக்‌ஷர் படேல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 89 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

3-ம் நாளான இன்று வாஷிங்டன் சுந்தரும் அக்‌ஷர் படேலும் நன்கு விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். சுழற்பந்துவீச்சில் இருவரும் அதிக ரன்கள் குவிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றார்கள். இதனால் இருவரையும் பிரிக்க இங்கிலாந்து அணி மிகவும் தடுமாறியது. இருவர் கூட்டணி 79 பந்துகளில் 50 ரன்களை முதலில் சேர்த்தது. மிகவும் எதிர்பார்த்த பெஸ் இன்று சுமாராகப் பந்துவீசியதால் வேறுவழியின்றி தவித்தார் இங்கிலாந்து கேப்டன் ரூட். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் - அக்‌ஷர் கூட்டணி 171 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தியது. எனினும் தேவையில்லாமல் ஓடி 43 ரன்களில் ரன் அவுட் ஆனார் அக்‌ஷர் படேல். அப்போது 96 ரன்களில் இருந்தார் வாஷிங்டன் சுந்தர். அவர் எப்படியும் சதமடித்து விடுவார் என நம்பினார்கள் இந்திய ரசிகர்கள். 

ஆனால் அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகிய இருவரையும் டக் அவுட் செய்தார் பென் ஸ்டோக்ஸ். இதனால் மறுமுனையில் இருந்த வாஷிங்டன் சுந்தர், ஏமாற்றத்தோடு 96 ரன்களுடன் ஓய்வறைக்குத் திரும்பினார். 

இந்திய அணி, 114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்துத் தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும் லீச் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது.   

இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் புதிய பந்து முதலில் அக்‌ஷர் படேலுக்குக் கொடுக்கப்பட்டாலும் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் எடுத்தவர் அஸ்வின் தான். தனது முதல் ஓவரிலேயே கிராவ்லியை 5 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்த அஸ்வின், அடுத்த பந்தில் ஜானி பேர்ஸ்டோவை வெளியேற்றினார். அக்‌ஷர் படேல் தனது 5-வது ஓவரின் முடிவில் டாம் சிப்லியை 3 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். பென் ஸ்டோக்ஸ் வந்த வேகத்தில் 2 ரன்களில் அக்‌ஷர் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் தோல்வியடைவது உறுதி என்கிற நிலைமை உருவானது. 

சில ஓவர்கள் தாக்குப்பிடித்த போப், 15 ரன்களில் அக்‌ஷர் பந்தில் ஆட்டமிழந்தார். அவரை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார் ரிஷப் பந்த். அடுத்த ஓவரில் கேப்டன் ரூட்டை 30 ரன்களில் எல்பிடபிள்யூ செய்தார் அஸ்வின். 

3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 33 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்தது. லாரன்ஸ் 19, பென் ஃபோக்ஸ் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இதன்பிறகு மீதமுள்ள 4 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி அதிகம் சிரமப்படவில்லை. 61 பந்துகள் வரை தாக்குப்பிடித்த பென் ஃபோக்ஸ் 13 ரன்களில் அக்‌ஷர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தன்னுடைய அடுத்த ஓவரில் பெஸ்ஸை 2 ரன்களில் வெளியேற்றினார் அக்‌ஷர் படேல். இதன்மூலம் அவர் மீண்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 டெஸ்டுகளில் நான்கு முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். அஸ்வின் தனது 23-வது ஓவரில் லீச்சை 2 ரன்களிலும் லாரன்ஸை 50 ரன்களிலும் ஆட்டமிழக்கச் செய்தார்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 54.5 ஓவர்களில் 135 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் கடைசி டெஸ்டை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அஸ்வின், அக்‌ஷர் படேல் ஆகிய இருவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT