தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மே.இ. தீவுகள் அணிக்கு 324 ரன்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராஸ் ஐலெட்டில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 298 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 174 ரன்களும் எடுத்தது. மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்குச் சுருண்டது. 3-ம் நாள் முடிவில் 324 ரன்கள் இலக்கை எதிர்கொண்ட நிலையில் தனது 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்துள்ளது.
3-ம் நாளில் தென் ஆப்பிரிக்காவை 2-வது இன்னிங்ஸில் 174 ரன்களுக்குச் சுருட்டியது மே.இ. தீவுகள் அணி. 73 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ரபாடா 40 ரன்கள் எடுத்து சரிவை ஓரளவு தடுத்து நிறுத்தினார். வான் டர் டுசன் 75 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கெமர் ரோச் 4 விக்கெட்டுகளையும் கைல் மேயர்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதனால் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய மே.இ. தீவுகள் அணிக்கு 324 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இன்னும் இரு நாள்களும் பத்து விக்கெட்டுகளும் மே.இ. தீவுகள் அணி வசம் உள்ளன. தெ.ஆ. அணி அளித்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ளுமா?
2-வது டெஸ்ட் நிறைவு பெற்ற பிறகு இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜூன் 26 முதல் தொடங்குகிறது.