நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 2-வது நாள் தேநீர் இடைவேளையில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
2-வது நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் சேத்தேஷ்வர் புஜாரா ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு தனது 36-வது பந்தில் புஜாரா பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார்.
இதையும் படிக்க: 36-வது பந்தில் முதல் ரன்னை எடுத்த புஜாரா
ஆனால், மொத்தம் 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்த புஜாரா 8 ரன்களுக்கு டிரென்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, கேப்டன் கோலியுடன் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே இணைந்தார். இந்த இணை நிதானம் காட்டி விளையாடியது. இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்து விளையாடி வந்த நிலையில் போதிய வெளிச்சன்மை நிலவியது.
இதனால், கள நடுவர்கள் முன்கூட்டியே தேநீர் இடைவேளை எடுக்க முடிவு செய்தனர்.
2-ம் நாள் ஆட்ட தேநீர் இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 35 ரன்களுடனும், ரஹானே 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன், நீல் வேக்னர், டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.