பிரிஸ்டோல்: இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 92 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து ஆடி வந்தது.
இங்கிலாந்தின் பிரிஸ்டோல் நகரில் புதன்கிழமை தொடங்கிய இந்த 4 நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் லெளரன் வின்ஃபீல்டு ஹில் - டேமி பியூமெளன்ட் கூட்டணி இன்னிங்ûஸ தொடங்கியது. இதில் லெளரன் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களுக்கு வீழ்ந்தார்.
அடுத்து களம் கண்ட கேப்டன் ஹீதர் நைட் நிதானமாக ஆடி ரன்கள் சேகரித்தார். மறுபுறம், டேமி பியூமெளன்ட் 6 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நடாலி ஸ்கீவர் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார். எஞ்சியோரில் எமி ஜோன்ஸ் 1, ஜியார்ஜியா எல்விஸ் 5 ரன்களுக்கு வீழ்ந்தனர். சதமடிக்கும் வாய்ப்பை இழந்த ஹீதர் 9 பவுண்டரிகளுடன் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நாளின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. சோஃபியா டங்க்லி 12, கேத்தரின் பிரன்ட் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் ஸ்னேஹ ரானா 3, தீப்தி சர்மா 2, பூஜா வஸ்த்ரகர் 1 விக்கெட் சாய்த்தனர்.
7 ஆண்டுகளுக்குப் பின்:
இந்திய மகளிர் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது சுமார் 7 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த 2014 நவம்பரில் இதே இங்கிலாந்து அணியுடன் விளையாடிய இந்தியா, அதில் வெற்றி கண்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.