இங்கிலாந்துடனான டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய மகளிர் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய மகளிர், இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு டெஸ்ட் ஆட்டம் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
2-ம் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது.
அரைசதம் அடித்த டன்க்ளே 66 ரன்களுடனும் ஷ்ருப்சோல் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு ஷ்ருப்சோல் துரிதமாக ரன் சேர்க்கத் தொடங்கினார். இதனால், இங்கிலாந்து ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், அதிரடி அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷ்ருப்சோல் 33 பந்துகளில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட்டுடன் 396 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டன்க்லே 74 ரன்கள் எடுத்தார்.
இந்திய மகளிர் தரப்பில் ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ஜுலான் கோஸ்வாமி, பூஜா வஸ்தராகர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய மகளிர் அணி பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க வீராங்கனைகளாகக் களமிறங்கிய ஸ்மிருதி மந்தானா, ஷெபாலி வெர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.
2-ம் நாள் தேநீர் இடைவேளை வரை விக்கெட்டைப் பறிகொடுக்காமல் 63 ரன்கள் சேர்த்து இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மந்தானா 27 ரன்களுடனும், ஷெபாலி 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.