ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு ஆட்டத்தில்கூட விளையாடாத குல்தீப் யாதவ் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோருக்கு இந்தியக் கேப்டன் அஜின்க்யா ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் வென்று சாதனை படைத்த பிறகு இந்தியக் கேப்டன் அஜின்க்யா ரஹானே ஓய்வறையில் பேசிய விடியோவை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
ரஹானே பேசியது:
"இது நம் அனைவருக்குமே மிகப் பெரிய தருணம். அடிலெய்ட் ஆட்டத்துக்குப் பிறகு மெல்போர்னிலிருந்து மீண்டு வந்தது மிகவும் சிறந்தது. இதில், ஒருவரோ இருவரோ அல்லாமல் அனைவரது பங்களிப்பும் இருந்தது உண்மையில் சிறந்த விஷயம்.
குல்தீப் யாதவ் மற்றும் கார்த்திக் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். குல்தீப்புக்கு இது மிகவும் கடினமாக இருக்கும். ஒரு ஆட்டத்தில்கூட விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கல்லை. எனினும், குல்தீப்பின் மனப்பான்மை நன்றாக இருந்தது.
நாம் இப்போது இந்தியா போகிறோம். உனக்கான (குல்தீப்) நேரம் வரும். கடினமாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். கார்த்திக் செய்ததும் அட்டகாசமான செயல்."
3-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவின் முதன்மை சுழற்பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டபோதிலும் அணியின் 3-வது சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுக்கு 4-வது டெஸ்ட் ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பேட்டிங் திறனைக் கருத்தில் கொண்டு சுழற்பந்துவீச்சாளராக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரே அணியில் சேர்க்கப்பட்டார். எனினும், இந்தத் தேர்வுக்கு சிறப்பான ஆட்டத்தின் மூலம் நியாயம் கற்பித்துவிட்டார் வாஷிங்டன்.
இந்திய அணி அடுத்தபடியாக இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால், அதில் குல்தீப்புக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.