டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை விரைவாக எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 5-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 63 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. 168 பந்துகளில் 43 ரன்களுடன் புஜாராவும் 23 பந்துகளில் 10 ரன்களுடன் ரிஷப் பந்தும் களத்தில் உள்ளார்கள்.
5-ம் நாளில் கம்மின்ஸ் பந்துவீச்சில் பவுண்டரி அடித்தார் ரிஷப் பந்த். அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை எட்டினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை விரைவாக எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையைப் பெற்றார். பந்த், 27 இன்னிங்ஸில் இந்த இலக்கை அடைந்தார். இதற்கு முன்பு, எம்.எஸ். தோனி 32 இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்திருந்தார்.
இந்திய அணிக்காக 16 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் ரிஷப் பந்த் விளையாடி முறையே 374, 210 ரன்களை எடுத்துள்ளார்.