சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மும்பை அணிக்காக முதல்முறையாக விளையாடியுள்ளார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன்.
கரோனா சூழல் காரணமாக உள்நாட்டு போட்டிகள் தாமதமான நிலையில், அதில் முதலாவதாக சையது முஷ்டாக் அலி டி20 போட்டியை ஜனவரி 10 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்கான மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் தேர்வாகியுள்ளார். மும்பை அணி அறிவித்துள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 22 பேர் கொண்ட அணியில் முதல்முறையாக 21 வயது அர்ஜூன் தேர்வாகியுள்ளார். இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இதற்கு முன்பு பங்களித்துள்ள அர்ஜூன், இந்திய யு-19 அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற ஹரியாணாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி சார்பாக முதல்முறையாக விளையாடியுள்ளார் அர்ஜூன்.
இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை அணி, 19.3 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹரியாணாவின் ஜெயந்த் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் கடைசியாகக் களமிறங்கிய அர்ஜூன் ஒரு பந்தையும் எதிர்கொள்ளவில்லை. இதன்பிறகு விளையாடிய ஹரியாணா அணி, 17.4 ஓவர்களில் 144/2 ரன்கள் எடுத்து இலக்கை எளிதாக அடைந்தது.
இந்த ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டுடன் 34 ரன்கள் கொடுத்துள்ளார் 21 வயது அர்ஜூன். தொடக்க வீரர் பிஷ்னாயின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார்.