இலங்கையுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து 9 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் ஜோகன்னஸ்பர்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணாரத்னே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் குசால் பெரேரா மட்டுமே அதிரடி காட்டி அரைசதம் அடித்தார். அவரும் 60 ரன்கள் சேர்த்த நிலையில் 2-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அபாரமாக பந்துவீசிய நோர்க்கியா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர, முல்டர் 3 விக்கெட்டுகளையும், சிபாம்லா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்கிரம் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
எனினும் டீன் எல்கர் மற்றும் வாண்டர் டசன் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். குறிப்பாக எல்கர் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் 9 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
எல்கர் 92 ரன்களுடனும், வாண்டர் டசன் 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.