இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் தேநீர் இடைவேளையின்போது, 6 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்தின் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109.5 ஓவர்களில் 325 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 150, அக்ஷர் படேல் 52 ரன்கள் எடுத்துள்ளார்கள். நியூசிலாந்துச் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், 47.5 ஓவர்கள் வீசி, 119 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளர் என்கிற சாதனையை அஜாஸ் படேல் படைத்துள்ளார்
டெஸ்ட்: ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்
ஜிம் லேகர் - 10-53 vs ஆஸ்திரேலியா, 1956
அனில் கும்ப்ளே - 10-74, vs பாகிஸ்தான், 1999
அஜாஸ் படேல் - 10-119, vs இந்தியா, 2021
நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அற்புதமாகப் பந்துவீசி வருகிறது. டாம் லேதம், வில் யங், ராஸ் டெய்லர் என முதல் மூன்று விக்கெட்டுகளையும் அற்புதமான பந்துவீசினால் வீழ்த்தினார் சிராஜ். அதன்பிறகு மிட்செல்லை 8 ரன்களில் அக்ஷர் படேலும் ஹென்றி நிகோல்ஸை 7 ரன்கள் அஸ்வினும் ரச்சின் ரவிந்திராவை 4 ரன்களில் ஜெயந்த் யாதவும் வெளியேற்றினார்கள்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் தேநீர் இடைவேளையின்போது, 16.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.