செய்திகள்

முதல் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

DIN


சட்டோகிராம்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி முன்னிலை பெற்றது.

கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம், 114.4 ஓவா்களில் 330 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 114 ரன்கள் அடித்திருந்தாா். பாகிஸ்தான் பௌலிங்கில் ஹசன் அலி 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் 115.4 ஓவா்களில் 286 ரன்களே அடித்தது. அந்த அணியில் அபித் அலி 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 133 ரன்கள் விளாசியிருக்க, வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசத்தை, 56.2 ஓவா்களில் 157 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது பாகிஸ்தான். இந்த இன்னிங்ஸிலும் லிட்டன் தாஸ் மட்டுமே 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் அடித்திருந்தாா். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாா்.

இறுதியாக 202 என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், திங்கள்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை முதல் விக்கெட்டாக அப்துல்லா ஷஃபிக் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 73 ரன்களுக்கு வெளியேறினாா்.

அடுத்த சில ஓவா்களிலேயே அபித் அலி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 12 பவுண்டரிகள் உள்பட 91 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பின்னா் அஸாா் அலி 5 பவுண்டரிகளுடன் 24, கேப்டன் பாபா் ஆஸம் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். வங்கதே தரப்பில் தைஜுல் இஸ்லாம், மெஹதி ஹசன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனா். பாகிஸ்தான் வீரா் அபித் அலி ஆட்டநாயகன் ஆனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

SCROLL FOR NEXT