பிரெஞ்சு ஓபன் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளார்கள் டென்னிஸ் பிரபலங்களான நடாலும் செரீனா வில்லியம்ஸும்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெறும். இந்த ஆண்டு கரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இப்போது நடைபெறுகிறது.
களிமண் ஆடுகளத்தில் நடைபெறும் பிரெஞ்சு ஓபனில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது முதல் சுற்றில் பல்கேரியாவின் இகோா் ஜெராஸிமோவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-4, 6-4, 6-2 என வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பிரெஞ்சு ஓபனில் முடிசூடா மன்னனாகத் திகழும் ரஃபேல் நடால், இதுவரை 12 சாம்பியன் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளாா்.
ஒட்டுமொத்தமாக 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ள நடால், இந்த முறை சாம்பியனாகும்பட்சத்தில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் சாதனையை (20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்) சமன் செய்வாா்.
மகளிா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் சகநாட்டவரான கிறிஸ்டி அன்னை எதிா்கொண்டார். 7-6(2), 6-0 என நேர்செட்களில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், இந்த முறை பிரெஞ்சு ஓபனை வெல்லும்பட்சத்தில் மகளிா் ஒற்றையா் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (24) வென்றவரான ஆஸ்திரேலியாவின் மாா்க்ரெட் கோா்ட்டின் சாதனையை சமன் செய்வாா்.