பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. துபையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் காயம் காரணமாக ராயுடுவுக்குப் பதில் ருதுராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
நிகிடிக்கு பதில் இம்முறை ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார். தில்லி அணியில் ஷிம்ரோன் ஹெத்மயர், மார்கஸ் ஸ்டாய்னில், ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நார்ஜே ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இரு அணி வீரர்களும், இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் இரண்டு அணி வீரர்களும் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மற்றும் எஸ்.பி.பி. ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சிஎஸ்கே அணி வீரர்கள் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
அதேசமயம் டெல்லி அணி, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மறைவிற்காக கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.