பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் பங்கேற்ற 22 வயது ஒசாகா, அதில் சாம்பியன் பட்டம் வென்று தனது 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதில், இறுதி ஆட்டத்தில் பெலாரஸின் விக்டோரியா அசரென்காவுக்கு எதிராக ஆடியபோது ஒசாகாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஒசாகா, மேலும் கூறியிருப்பதாவது: துரதிருஷ்டவசமாக என்னால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாட முடியாமல் போய்விட்டது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு மிகவும் பிடித்தமான பிரெஞ்சு ஓபன் போட்டியில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். அதேநேரத்தில் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும், பிரெஞ்சு ஓபனில் பங்கேற்கவுள்ள சக வீரர், வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் திங்கள்கிழமை தொடங்குகிறது.