யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியைச் சமீபத்தில் வென்ற ஜப்பான் வீராங்கனை ஒசாகா அடுத்து நடைபெறவுள்ள பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
மே 24 - ஜூன் 7 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பதிலாக, பிரெஞ்சு ஓபன் போட்டி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறவுள்ளது. பிரெஞ்சு ஓபன் போட்டியின் ஆட்டங்களைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் 11,500 ரசிகர்கள் ஆட்டங்களைப் பார்க்க அனுமதிக்கப்படவுள்ளார்கள். எனினும் தகுதிச்சுற்று ஆட்டங்களைக் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் ஆட்டங்களைப் பார்க்க வரும் 11 வயதுக்கு மேற்பட்ட ரசிகர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல வீராங்கனை ஒசாகா, பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாகத் தன்னால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் விக்டோரியா அசரன்காவை வென்று பட்டம் வென்றார் ஒசாகா. இதன்மூலம் மகளிர் தரவரிசையில் ஆறு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.
உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா சமீபத்தில் முதலிடத்தைப் பிடித்தார்.
போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வருடத்தில் ரூ. 284 கோடி (37.4 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 22 வயது ஒசாகா. இதன்மூலம் கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்த வருடம் செரீனாவின் வருமானத்தை விடவும் ரூ. 10.64 கோடி (1.4 மில்லியன் டாலர்) அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளார் ஒசாகா.
1990 முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டு வருகிறது. இந்த விதத்தில், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் ரூ. 284 கோடி வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் புதிய சாதனை நிகழ்த்தினார் ஒசாகா. இதற்கு முன்பு 2015-ல் மரியா ஷரபோவா 225.65 கோடி வருமானம் ஈட்டியதே அதிகமாக இருந்தது. அந்தச் சாதனையை ஒசாகா தாண்டினார்.