இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியைக் காண தினமும் 5,000 ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக போட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் - ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், கரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் போட்டியை நடத்துவது தொடா்பாக கேள்வி எழுந்தது. இதையடுத்து இந்த வருட விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது. மே 24- ஜூன் 7 தேதிகளில் நடைபெறவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. பதிலாக, பிரெஞ்சு ஓபன் போட்டி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறவுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த யு.எஸ். ஓபன் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், பிரெஞ்சு ஓபன் போட்டியின் ஆட்டங்களைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தினமும் 11,500 ரசிகர்கள் ஆட்டங்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். தகுதிச்சுற்று ஆட்டங்களைக் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. டென்னிஸ் ஆட்டங்களைப் பார்க்க வரும் 11 வயதுக்கு மேற்பட்ட ரசிகர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனப் போட்டி நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் ரசிகர்களின் எண்ணிக்கை தற்போது 11,500-லிருந்து 5,000 எனக் குறைக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகமாகியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து பிரபல வீராங்கனைகள் ஆஷ் பார்டி, ஒசாகா ஆகியோர் விலகியுள்ளார்கள்.