கரோனா பாதுகாப்பு வளையத்தினால் உண்டான பாதிப்பு காரணமாக பிபிஎல் போட்டியிலிருந்து பிரபல ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் விலகியுள்ளார்.
10-வது பிபிஎல் டி20 போட்டி, டிசம்பர் 3 முதல் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் தான் விளையாடப் போவதில்லை என ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியதாவது:
உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், பிபிஎல் போட்டியில் நான் விளையாட வாய்ப்பே இல்லை.
கரோனா பாதுகாப்பு வளையத்தின் ஆரம்பக் காலக்கட்டங்களில் உள்ளோம். இது எவ்வளவு நாள் செல்லும் எனத் தெரியவில்லை. பயிற்சியாளர், பொது மேலாளர் போன்றவர்களிடம் இதுபற்றி வெளிப்படையாகப் பேசவேண்டும். அணியில் வீரர்களைத் தேர்வு செய்வது குறித்து கேள்வி எழும். ஒருவர் நீண்ட நாள் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் சிறிது நாள் ஓய்வு எடுத்துக்கொண்டால், அவருக்குப் பதிலாக விளையாடுபவர் நன்றாக விளையாடினால் என்ன ஆகும்? அந்த வீரருடைய இடத்தை இவர் எடுத்துக்கொள்வாரா? பாதுகாப்பு வளையத்தில் வசிப்பது வீரர்களின் மனநலத்தைப் பாதிக்கிறது. சில நாள்களுக்கு இயல்பு வாழ்க்கை வாழ்ந்தால் அது உதவியாக இருக்கும். இதுபற்றிய உரையாடல்கள் நிகழ வேண்டும் என்றார்.