சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் கிரேக் பார்க்லே சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக அப்பொறுப்பிலிருந்த இந்தியாவைச் சேர்ந்த சஷாங்க் மனோகரின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, அந்தப் பதவிக்கான தேர்தலில் கிரேக் பார்க்லே, சிங்கப்பூர் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் இம்ரான் கவாஜா ஆகியோர் போட்டியிட்டனர். ஐசிசியின் காலாண்டு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அதன் தலைவர் பதவிக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. அதற்கான மின்னணு வாக்குப்பதிவில் ஐசிசியின் 16 இயக்குநர்கள் வாக்களித்தனர். அதில் பார்க்லேவுக்கு 11 வாக்குகளும், கவாஜாவுக்கு 5 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து பார்க்லே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இணையம் வழியான கூட்டத்தில் பார்க்லே கூறியதாவது:
உலக கிரிக்கெட்டில் இந்தியா முக்கிய அங்கம் வகிக்கிறது. ஐசிசி அமைப்புக்கும் அதிகப் பங்களிக்கிறது. குடும்பங்களில் உள்ளது போல எங்களுக்குள்ளும் மோதல்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் தன்னுடைய முக்கியத்துவத்தை ஐசிசிக்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டுக்கும் இந்தியா தெரியப்படுத்தியுள்ளது. எனவே இந்திய கிரிக்கெட் ஐசிசிக்கு அவசியம்.
கருத்துவேறுபாடுகள் தோன்றும்போது நாங்கள் சரிசெய்து கொள்வோம். 1926-ம் வருடம் இந்தியாவும் நியூசிலாந்தும் ஐசிசியின் முழு உறுப்பினர் ஆகின. எனவே இரு நாடுகளும் கிட்டத்தட்ட 100 வருடங்களாக இந்த அமைப்பில் உள்ளன. ஐசிசிக்கு இந்தியாவும் நியூசிலாந்தும் முக்கியமான உறுப்பினர்கள் ஆகும். இந்தப் பங்களிப்பு இனியும் தொடரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை என்றார்.