ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்பது குறித்து டிசம்பர் 11 அன்று முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.
ஐபிஎல் போட்டியின்போது காயம் ஏற்பட்டதால் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகிய இருவருமே இந்திய அணியினருடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லாமல் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் (என்சிஏ) காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான நடைமுறைகளில் உள்ளார்கள். ரோஹித் தொடைப்பகுதி காயத்திலிருந்தும், இஷாந்த் இடுப்புக்கு மேல் பகுதி காயத்திலிருந்து மீண்டு வருகின்றனா்.
காயத்திலிருந்து இஷாந்த் சர்மா முழுவதுமாக மீண்டுவிட்டார். எனினும் டெஸ்ட் ஆட்டத்துக்கான உடற்தகுதியை அடையவில்லை. அதனால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
அதேபோல உடற்தகுதியை நிரூபிக்க ரோஹித் சர்மாவுக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது பிசிசிஐ. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
என்சிஏ-வில் காயத்திலிருந்து மீண்டு வருகிறார் ரோஹித் சர்மா. டிசம்பர் 11 அன்று அவருடைய உடற்தகுதி குறித்து மதிப்பீடு செய்யப்படும். அதன்பிறகு டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கலந்துகொள்வது பற்றிய தெளிவு கிடைக்கும்.
தன்னுடைய தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஐபிஎல் முடிந்த பிறகு இந்தியாவுக்குத் திரும்பினார் ரோஹித் சர்மா. அவருடைய தந்தை குணமாகி வருகிறார். இதனால் ரோஹித்தால் என்சிஏவுக்குச் சென்று காயத்துக்குச் சிகிச்சை பெற்று பயிற்சிகளை மேற்கொள்ள முடிகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.