விராட் கோலியை விடவும் ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என விக்கெட் கீப்பர் பார்தீவ் படேல் கூறியுள்ளார்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கேப்டனாக ஐந்தாவது முறையும் வீரராக ஆறாவது முறையும் ஐபிஎல் கோப்பையை வென்று மகத்தான ஐபிஎல் வீரராகப் பெயர் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா.
இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இதுபற்றி விக்கெட் கீப்பர் பார்தீவ் படேல் ஒரு பேட்டியில் கூறியதாவது:
ரோஹித் சர்மா, கோலி ஆகிய இருவர் தலைமையிலும் தலா மூன்று வருடங்கள் விளையாடியுள்ளேன். ரோஹித் சர்மா அணியை வழிநடத்தும் விதம் என்னைக் கவர்ந்துள்ளது. மைதானத்தில் நிதானமாக இருந்து, அழுத்தமான சூழல்களில் நல்ல முடிவுகளை எடுக்கிறார். அணியைக் கட்டமைப்பதில் ரோஹித் சர்மாவே சிறந்த கேப்டன்.
இக்கட்டான சூழல்களில் சொந்தமாக முடிவெடுக்கக் கூடியவர் ரோஹித் சர்மா. ஆனால் அதுபோன்ற சூழல்களில் அடுத்தவர்களைச் சார்ந்திருப்பார் கோலி. யார் நல்ல முடிவை எடுக்கக் கூடியவர், யார் ஆட்டத்தை நன்குக் கணிக்கக் கூடியவர், அழுத்தமான சூழல்களில் யார் ஒரு முடிவெடுத்து அதனால் அணியின் உதவக் கூடியவர்? இதில் ரோஹித் சர்மா சற்று முன்னிலையில் உள்ளார்.
விராட் கோலி மோசமான கேப்டன் என நான் சொல்லவில்லை. ஆனால் எந்த கேப்டன் பல போட்டிகளை வென்றுள்ளார்? ஒரு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது ஒரு கேப்டனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். எந்தப் போட்டியையும் விராட் கோலி வென்றதில்லை. கடினமான சூழல்களில் சரியான முடிவுகளை எடுப்பதில் நீங்கள் பின்தங்கியுள்ளீர்கள். அதனால் தான் ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்விகளைச் சந்தித்தது என்றார்.
ரோஹித் சர்மாவின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் 2015 - 2017 வரை விளையாடியுள்ளார் பார்தீவ் படேல். அதேபோல 2018 முதல் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ளார்.