ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணியால் ஜெயிக்க முடியாவிட்டால் டெஸ்ட் தொடரில் சிக்கல் ஏற்படும்: ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஒரு பேட்டியில் கூறியதாவது:
ஒருநாள், டி20 தொடர்களில் விராட் கோலியால் அணியை நன்கு வழிநடத்தி ஜெயிக்க முடியும். வெற்றிகளை கோலி ஆரம்பித்து வைத்தால் பிறகு இந்தியாவுக்கு அவர் திரும்பிய பிறகு இந்திய அணியால் டெஸ்ட் தொடரில் நன்கு விளையாட முடியும். ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணியால் ஜெயிக்க முடியாவிட்டால் டெஸ்ட் தொடரில் 4-0 என முழுமையாகத் தோல்வியடைய நேரிடும்.
வித்தியாசமான ஆக்ஷனுடன் வேகமாகப் பந்துவீசுகிறார் பும்ரா. அவர் ஆக்ரோஷமாக விளையாடி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்க வேண்டும். வார்னர், ஸ்மித்துக்கு நிறைய தொந்தரவுகளை பும்ரா அளித்துள்ளார். கோலியும் பும்ராவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்றார்.