2007 டி20 உலகக் கோப்பை புகழ் ஜொகிந்தர் சர்மா, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதை ஐசிசி பாராட்டியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 33,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2007 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிச்சுற்றில் கடைசி ஓவரில் பிரமாதமாகப் பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் ஜொகிந்தர் சர்மா. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், 2007 முதல் ஹரியானா காவல்துறையில் டிஎஸ்பியாகப் பணியாற்றி வருகிறார்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஹிசார் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஜொகிந்தர் சர்மாவைப் பாராட்டி ஐசிசி நிறுவனம் ட்வீட் வெளியிட்டுள்ளது. 2007-ல் உலகக் கோப்பை ஹீரோ, 2020-ல் நிஜ உலகின் ஹீரோ என அவரைப் பாராட்டியுள்ளது.