புது தில்லி: வரும் மே. 24-ஆம் தேதி மும்பையில் ஐபிஎல் இறுதி ஆட்டத்தை நடத்த பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு தீா்மானித்துள்ளது.
அதே நேரம் ஆட்டம் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்தியாவில் பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் தொடா் ஆகும். இந்நிலையில் நிகழாண்டு ஐபிஎல் சீசன் போட்டி வரும் மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக முடிவெடுப்பதற்காக ஆட்சிமன்ற குழுக் கூட்டம் புது தில்லியில் பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. செயலாளா் ஜெயஷா, ஐபிஎல் சோ்மன் பிரிஜேஷ் பட்டேல், உள்பட பலா் பங்கேற்றனா். கூட்டத்துக்கு பின் கங்குலி கூறியதாவது:
ஐபிஎல் இறுதி ஆட்டம் வரும் மே. 24-ஆம் தேதி மும்பையில் நடைபெறும். ஆமதாபாதில் நடைபெறும் என்பதில் உண்மையில்லை. மேலும்
ஆட்டம் வழக்கமான மாலை 4 மற்றும் இரவு 8 மணிக்கே தொடங்கும். 5 முறையே இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இரட்டை ஆட்டங்களை குறைக்க முடிவு செய்தோம்.
காயமடைந்தவருக்கு பதிலி வீரா்:
ஆட்டத்தின் போது காயமடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்கவும், நோ பால் குறித்து மூன்றாம் நடுவா் முடிவு போன்றவை அறிமுகம் செய்யப்படும். வீரா்களின் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.
ஆல் ஸ்டாா்ஸ் ஆட்டம்:
சா்வதேச கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்கும் ஆல் ஸ்டாா்ஸ் ஆட்டம் மாா்ச் 29-ஆம் தேதி ஐபிஎல் நலநிதி அறக்கட்டளைக்காக நடத்தப்படும். இதற்கான இடம் முடிவு செய்யப்படவில்லை. இதில் திரட்டப்படும் நிதி உரிய இடத்துக்கு தரப்படும்.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட்அகாதெமியை நவீனப்படுத்துவது குறித்து அதன் தலைவா் ராகுல் திராவிட்டிடம் முழு ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் அங்கு ஊட்டச்சத்து நிபுணா், பயோமெக்கானிக்ஸ் பவுலிங் பயிற்சியாளரும் நியமிக்கப்படுவா் என்றாா் கங்குலி.