சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை எடுத்துள்ளார் தமிழக வீரர் நடராஜன்.
இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் கேன்பராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், நடராஜன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
இதன்மூலம் தமிழக வீரரான நடராஜன், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்.
இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களைக் குவித்துள்ளது. 32-வது ஓவரின் முடிவில் கோலி ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பாண்டியாவும் ஜடேஜாவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆரம்பத்தில் நிதானமாக ரன்கள் எடுத்த இருவரும் கடைசி 5 ஓவர்களில் தங்களுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 45-வது ஓவரின் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர், 226 ஆக இருந்தது. ஆனால் இருவரும் கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 108 பந்துகளில் இருவரும் 150 ரன்கள் சேர்த்துள்ளார்கள். பாண்டியா 76 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 92 ரன்களும் ஜடேஜா 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் எடுத்தார்கள்.
ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் தொடக்க வீரர் லபுசானேவின் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன். இது அவருடைய முதல் சர்வதேச விக்கெட்டாகும். லபுசானே 7 ரன்கள் மட்டும் எடுத்தார். இதன்பிறகு கடந்த இரு ஒருநாள் ஆட்டங்களிலும் 62 பந்துகளில் சதமடித்த ஸ்மித், 7 ரன்களில் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி, 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.