ஆஸ்திரேலிய ஆடுகளத்தின் தன்மை வேறுவிதமாக இருப்பதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக உள்ளதாக ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி விளையாடியது பற்றி இந்திய பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:
இப்போதுதான் துபையில் இருந்து வந்துள்ளோம். அங்குள்ள ஆடுகளங்களில் அந்தளவுக்கு பவுன்ஸ் கிடையாது. அதேபோல இங்குள்ள பயிற்சி ஆடுகளங்களும் ஆட்டத்துக்கான ஆடுகளங்களில் இருந்து வித்தியாசமாக உள்ளன. எனவே சூழலுக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக்கொள்வதற்குச் சிறிது நேரம் தேவைப்படுகிறது. ஆடுகளத்தின் தன்மை, மைதானத்தில் உள்ள சூழலுக்கு நாங்கள் விரைவாக மாறிக்கொள்ள வேண்டும்.
14 நாள் தனிமைப்படுத்திக்கொண்டதும் சிரமமாக இருந்தது. விடுதி அறையில் மட்டுமே இருந்து பயிற்சிக்கு மட்டும் வெளியே வந்து மீண்டும் அறைக்குள் சென்றுவிட வேண்டும். எனினும் நாங்கள் தொழில்முறை விளையாட்டு வீரர்கள். இதுகுறித்து புகார் சொல்லக் கூடாது என்றார்.