தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகளை சர்வதேச குத்துச்சண்டை வீரர் சி. லட்சுமிகாந்தன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சனிக்கிழமை வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கோவை, திண்டுக்கல் உள்பட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 243 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 46 கிலோ முதல் 100 கிலோ வரை மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறுகின்றன. நடுவர்களாக சென்னை டி.ஆர். சக்திவேல், மோகன், புதுச்சேரி பாலா ஆகியோர் உள்ளனர். வெற்றி பெறும் வீரர்களுக்கு சனிக்கிழமை மாலை பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
இந்தப் போட்டிகளில் பத்து வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்கள் அக்டோபர் முதல் வாரத்தில் சிம்லாவில் இந்திய குத்துச்சண்டை கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட குத்துச்சண்டை கழகச் செயலாளர் ஜி. ஜலேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.