எம்.எஸ்.தோனியைத் தாண்டி சிந்திக்க வேண்டும்; ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இளம் வீரர் ரிஷப் பந்த் அணியில் இடம்பெற வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.
ஹிந்தி செய்தி சேனல் ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை பேட்டி அளித்தபோது, வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தோனி இடம்பெற வேண்டும் என கருதுகிறீர்களா? என்று கவாஸ்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, நாம் தோனியைத் தாண்டி சிந்திக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியைக் கணக்கில் கொண்டால், அணியில் கட்டாயம் ரிஷப் பந்த் இடம்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இல்லையெனில், சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்யலாம். அவர் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்று பதிலளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
அணியில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
ரிஷப் பந்த் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவரது கிரிக்கெட் பயணத்தை ஆய்வு செய்தால் சிறப்பாகவே உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக அவர் செயல்பட்டுள்ளார். அவர் விளையாட்டில் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்வார் என்று நம்பலாம் என்றார் கவாஸ்கர்.