நடப்பு ஐபிஎல் சீசனில் இரண்டாவது பாதி பெருமை கொள்ளும் வகையில் எங்களுக்கு அமைந்தது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் 6 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது பெங்களூரு. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 8 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றி கண்டது.
அந்த அணியின் கடைசி லீக் ஆட்டம் பெங்களூரில் கடந்த சனிக்கிழமை ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்றது.
அந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு.
அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறியதாவது:
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த எங்கள் அணி, ஐபிஎல் போன்ற மிகப் பெரிய தொடரில் மீண்டு வருவது என்பது கடினமான ஒன்றாகும். இந்த சீசனில் 2ஆவது பாதி சிறப்பாக அமைந்தது.
கடைசி ஆட்டத்தில் குர்கீரத் சிங் மான், ஷிம்ரான் ஹெட்மயர் ஆகியோர் அரை சதம் பதிவு செய்து வெற்றிக்கு வித்திட்டனர்.
ஆதரவும், ஊக்கமும் அளித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி. அடுத்த ஆண்டு எங்களின் செயல்பாட்டை மேம்படுத்திக் கொள்கிறோம் என்றார் கோலி.