இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியின் முதலாவது ஆட்டத்தில் கிடைக்கும் வருவாயை புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி அறிவித்துள்ளது.
12ஆவது ஐபிஎல் தொடர் சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது தோனி தலைமையிலான சிஎஸ்கே.
இந்நிலையில், சிஎஸ்கே அணியின் இயக்குநர் ராகேஷ் சிங், சமூக வலைதளமான சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், முதல் ஆட்டத்தில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாயை புல்வாமா தாக்குதலில் நாட்டுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம். இந்திய ராணுவத்தில் லெஃப்டினன்ட் கர்னல் கௌரவப் பதவியை வகித்துவருபவரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனி இதற்கான காசோலையே வழங்குவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த மாதம் 14ஆம் தேதி பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை காரில் நிரப்பிக் கொண்டு வந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கிரிக்கெட் அணியும் அண்மையில் நிதியுதவி செய்தது.