மார்ச் 6: உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது தொடர்பாக கவலைப்படவில்லை என தமிழகத்தின் அதிரடி ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.
ஆஸி. அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் பங்கேற்று ஆடி வருகிறார் விஜய் சங்கர்.
நாக்பூரில் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் 46 ரன்களை விளாசினார். பின்னர் சிக்கலான கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இதனால் அவருக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் அவர் கூறியுள்ளதாவது:
உலகக் கோப்பை போட்டிகள் 2019 நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதற்கான இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பதற்காக எனது தூக்கத்தை தொலைக்கவில்லை.
ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானவை. கேப்டன் கோலி வழங்கிய வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினேன்.
கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பேட்டை சுழற்றுவதற்கு சிரமப்பட்டேன். அத்தவறை சரி செய்து கொண்டதால், தற்போது பேட்டிங்கில் நிலையாக ஆட முடிகிறது. எந்த சூழல் இருந்தாலும், அமைதியாக இருக்க பழகிக் கொண்டேன். எந்த நேரத்திலும் பந்துவீச மனதளவில் தயாராக உள்ளேன்.
அனுபவ வீரரான பும்ராவும், கடைசி ஓவரை வீச எனக்கு அறிவுரை கூறினார்.
வெற்றி பெறுவதற்கான விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் நான் அதற்காக அதிகம் மகிழ்ந்து விட மாட்டேன். எனது கிளப் அணிக்காக மட்டுமே கடைசி ஓவரை வீசி உள்ளேன் என்றார் விஜய்சங்கர்.