இந்திய டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
ராம்குமார் தனது தகுதிச்சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் போலாந்தின் காமில் மஜ்செர்ஸாக்கை எதிர்கொண்டார். போட்டித் தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருப்பவரும், உலகின் 111-ஆம் நிலை வீரருமான காமில், 7-6(7/5), 6-3 என்ற செட்களில் ராம்குமாரை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம், 19 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
உலகின் 154-ஆம் நிலை வீரரான ராம்குமார், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் பிரதான சுற்றுக்கு முன்னேற முயன்று வருகிறார். அதிகபட்சமாக, கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டம் வரை முன்னேறி தோல்வி கண்டார்.