இந்திய தொழில்முறை குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத் (27), கார் விபத்தில் சிக்கி காயமடைந்ததை அடுத்து, உலக குத்துச்சண்டை கவுன்சில் நடத்தும் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
நீரஜ் கோயத், இரு முறை உலக சாம்பியனான பிரிட்டனைச் சேர்ந்த ஆமிர் கானை அந்தப் போட்டியில் எதிர்கொள்ள இருந்தார். அவர்கள் மோதும் போட்டி, வரும் ஜூலை 12-ஆம் தேதி சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், நீரஜ் கோயத் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பயிற்சி முடித்து வீட்டுக்குத் திரும்பும் வேளையில் அவரது கார் விபத்துக்குள்ளானதாகவும், இதில் அவரது தலை, முகம், இடது கை ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நீரஜ், டபிள்யூபிசி உலக சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆமிர் கானுக்கு எதிரான வேறொரு போட்டியாளரை தேர்வு செய்யும் முயற்சியில் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
டபிள்யூபிசி ஆசிய வெல்டர் வெயிட் சாம்பியனான நீரஜ் கோயத், தனது தொழில்முறை குத்துச்சண்டையில் இதுவரை 2 நாக் அவுட்டுகள் உள்பட 11 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். 3 தோல்விகளை கண்டுள்ள நீரஜ், 2 போட்டிகளை டிரா செய்துள்ளார்.