ஓய்வை ஒத்திவைத்தார் கெயில்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் (39), அந்த முடிவை சற்று ஒத்தி வைத்துள்ளார்.
ஓய்வை ஒத்திவைத்தார் கெயில்


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் (39), அந்த முடிவை சற்று ஒத்தி வைத்துள்ளார். உலகக் கோப்பை போட்டியை அடுத்து இந்தியாவுடனான தொடருக்குப் பிறகு அவர் ஓய்வு பெற இருக்கிறார். 
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான கிரிக்கெட் தொடர், மேற்கிந்தியத் தீவுகளில் ஆகஸ்ட் - செப்டம்பரில் நடைபெறவுள்ளது. அந்தத் தொடரில், ஆகஸ்ட் 30-ஆம் தேதி தனது சொந்த நகரமான கிங்ஸ்டனில் தொடங்கும் டெஸ்ட் போட்டியுடன் கெயில் ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
அவ்வாறு கெயில் ஓய்வு பெறும் பட்சத்தில், இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு ஓய்வு பெற்ற முக்கிய வீரர்களில் 3-ஆவது நபராக கெயில் இணைவார். முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக் (2004), தென்னாப்பிரிக்க வீரர் ஜேக் காலிஸ் (2013) ஆகியோர் அவ்வாறு ஓய்வு பெற்றிருந்தனர். 
உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கெயிலிடம் கேட்டபோது, உலகக் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறப்போவதில்லை. இன்னும் சில ஆட்டங்களில் விளையாட இருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நிச்சயம் விளையாடுவேன். டெஸ்ட் தொடரிலும் விளையாடலாம். ஆனால், டி20 போட்டியில் கண்டிப்பாக விளையாட மாட்டேன் என்றார். 
கெயிலின் திட்டம் குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஊடக மேலாளர் பிலிப் ஸ்பூனர் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான தொடரே கெயிலின் கடைசி சர்வதேச தொடர் என்றார். 
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் அந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பை பெறுவதற்காக கெயிலை அதுவரை அணியில் நீடிக்க வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com