இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஓய்வுக்கு இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (திங்கள்கிழமை) அறிவித்தார். இதையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட்டும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஓய்வை அனுபவியுங்கள் ஜாம்பவான்" என்று பதிவிட்டுள்ளார். இத்துடன் யுவராஜ் சிங்குடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டுவர்ட் பிராட் வீசிய 19-வது ஓவரில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். இந்த சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. இதனால், யுவராஜ் சிங் மற்றும் ஸ்டுவர்ட் பிராட் இடையிலான இந்த பந்தம் ரசிகர்கள் மனதில் இருந்து எப்போதும் நீங்காது.
ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த அந்தப் போட்டிக்குப் பிறகு, யுவராஜ் சிங்குடன் கைகுலுக்கியப் புகைப்படத்தைத்தான், பிராட் இந்தப் பதிவில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.