வரும் 2022 கத்தார் உலகக் கோப்பை மற்றும் 2023 சீனா ஏஎப்சி கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்தியா எளிதான பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இரு போட்டிகளுக்கான ஆசிய அணிகள் அணிகள் அட்டவணை தேர்வு கோலாலம்பூரில் உள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 40 ஆசிய நாடுகள் தலா 5 அணிகள் கொண்ட 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகள் உள்ளூர், வெளியூர் என இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் ஆட வேண்டும். இந்த ஆட்டங்கள் வரும் செப்.5-ஆம் தேதி தொடங்குகிறது.
8 பிரிவுகளின் வின்னர் மற்றும் 4 சிறந்த ரன்னர் அணிகள் 2022 உலகக் கோப்பை தகுதிச் சுற்று மற்றும் 2023 ஆசிய கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். அடுத்த சிறந்த 24 அணிகள், ஏஎப்சி கோப்பை போட்டியில் மீதமுள்ள 22 இடங்களுக்கான தனியாக நடத்தப்படும் தேர்வு போட்டியில் பங்கேற்கும்.
குரூப் இ பிரிவில் இந்தியா: குரூப் இ பிரிவில் நடப்பு சாம்பியன் கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளுடன் இந்தியா இடம் பெற்றுள்ளது.
பலம் மிக்க அணிகளான ஈரான், ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, இராக், உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இந்தியா இடம் பெறவில்லை என்பது ஆறுதலான விஷயமாகும்.
கடுமையான சவால்: இதுதொடர்பாக இந்திய தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறியதாவது: நமது அணிக்கு கடும் சவால் காத்துள்ளது. ஒவ்வொரு எதிரணிக்கும் உரிய மரியாதையை நாம் தர வேண்டும். களத்தில் இறங்கினால் வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாக கொள்ள வேண்டும் என்றார்.
பிஃபா போட்டிகள் இயக்குநர் கிறிஸ்டியன் உகர், ஆஸி. ஜாம்பவான் டிம் காஹில் ஆகியோர் அணிகளை தேர்வு செய்தனர்.