உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் பெற்ற தோல்வி எதிரொலியாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை முழுமையாக சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சரிவர ஆடாத கேதார் ஜாதவ், தினேஷ் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அடுத்த 2020 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில், ஒருநாள் ஆட்டங்களில் இருந்து அதில் கவனம் செலுத்தி, அதற்கு தயாராகும் வகையில் சீரமைப்பை மேற்கொள்ள அணி நிர்வாகம் முனைப்பாக உள்ளது.
மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்த போதே, ஒருநாள் உலகக் கோப்பைக்கு 2 ஆண்டுகள், டி20 உலகக் கோப்பைக்கு 18 மாதங்கள் முன்னதாகவே அணியை தயார்படுத்தும் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த இந்தியா எதிர்கொள்ளும் பெரிய போட்டி டி20 உலகக் கோப்பையாகும். 4 ஆண்டுகள் கழித்து இப்போட்டி மீண்டும் நடைபெறுகிறது. எம்எஸ்கே. பிரசாத் தலைமையிலான தேர்வாளர் குழு பிசிசிஐ புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் நீடிக்கும் நிலையில், அடுத்த 14 மாதங்களுக்கான அணியின் செயல்பாடுகளை வகுக்கும் எனத் தெரிகிறது.
நிலைகுலைந்த மிடில் ஆர்டர்: ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் முற்றிலும் நிலை குலைந்து காணப்பட்டது. கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சோபிக்கவில்லை.
இந்தியாவைத் தவிர வேறு இடங்களில் நடைபெறும் ஆட்டங்களில் நெருக்கடியான சூழலை கையாளாமல் திணறுகின்றனர். இது அரையிறுதியில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
கடந்த 2017 ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தோல்விக்கு பின் இந்திய ஒருநாள் அணி கட்டமைக்கப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப், சஹல் ஆகியோர் சிறந்த பவுலர்களாக உருவாகினர்.
பேட்டிங்கில் தொடக்க வரிசை வீரர்களான ரோஹித், கோலி, ராகுல் ஆகியோர் ஆடினால் மட்டுமே ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. ஆனால் அவருக்கு உறுதுணையாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆடவில்லை.
மணிஷ் பாண்டே, ஷிரேயஸ் ஐயர் புறக்கணிப்பு: இளம் வீரர்களான மணிஷ் பாண்டே, ஷிரேயஸ் ஐயர் ஆகியோர் உலகக் கோப்பைக்கான அணி செயல் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டனர். ஷுப்மன் கில்லுக்கும் போதிய வாய்ப்பு தரப்படவில்லை.
இங்கிலாந்து சூழ்நிலைக்காக பேட்டிங் வாய்ப்பு தினேஷ் கார்த்திக்குக்கு கிடைக்கவில்லை. விக்கெட் கீப்பர் திறனுக்காக மட்டுமே அவர் அணியில் சேர்க்கப்பட்டார். காயமுற்று அவதிப்பட்டு வந்த கேதார் ஜாதவால் அதிரடியாக ஆட முடியவில்லை. தோனியின் அணுகுமுறை வெற்றி பெற, ஜடேஜா, பாண்டியா போன்றவர்கள் அவருடன் ஆட வேண்டும்.
டி20 உலகக் கோப்பை வரவுள்ள நிலையில் அணியை தயார்படுத்துவதில் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என கோலி கூறியுள்ளார். மேலும் 20 வீரர்கள் கொண்ட தொகுப்பை உடனே ஏற்படுத்தவும், கேதார், தினேஷ் கார்த்திக்கை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோலி, ரோஹித், பும்ரா, ராகுல், ரிஷப் பந்த், குல்தீப், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இதன் முக்கியமானவர்களாக இருப்பர்.
பாண்டே, ஐயர், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் அதிரடியாக ஆடுபவர்களாக கருதப்படுகின்றனர்.
பந்துவீச்சில் நவ்தீப் சைனி, கலீல் அகமது, தீபக் சஹார், சுழற்பந்தில் ராகுல் சஹார், மயங்க் மார்க்கண்டே, ஆல் ரவுண்டர் க்ருணால் பாண்டியா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சய் சாம்சன் ஆகியோருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.