புது தில்லி: முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படமானது இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் ஞாயிறன்று நடைபெற்ற உலக மகளிர் பாட்மிண்டன் சாம்பியன் இறுதி ஆட்டத்தில், ஜப்பானின் நாசோமி ஒகுஹாரவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் .
உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு திங்கள்கிழமை நள்ளிரவு இந்தியா வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு புதுதில்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை திங்களன்று சிந்து சந்தித்து ஆசிபெற்றார் உலக பாட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து. தங்கப்பதக்கத்துடன் நாட்டுக்கு பெருமையும் சேர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படமானது இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது.
அந்தப் புகைப்படத்தில் பி.டி.உஷாவின் மடியில் இளவயது பி.வி.சிந்து அமர்ந்திருக்கிறார். அந்தப் படத்திற்காக உஷா அளித்துள்ள வாசகம் பின்வருமாறு:
விளையாட்டின் மீதுள்ள ஆர்வமும் அர்ப்பணிப்பும் அத்துடன் கடின உழைப்பு ஒன்று சேரும்போது கண்டிப்பாக அதற்குரிய பலனைக் கொடுக்கும். சிந்துவின் வெற்றி வரக்கூடிய தலைமுறைகளுக்கு ஊக்கத்தை அளிக்கும். உலக மகளிர் பாட்மிண்டன் சாம்பியன் இறுதி ஆட்டத்தில் தங்கம் வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.